|
|
நில் கவனி கேன்சர்
நில் கவனி கேன்சர் - பாகம் 1
இவனுக்கு என்ன ஆச்சு?? எதுக்கு திடீர்னு கேன்சர் பத்தி எல்லாம் ஏதோ
சொல்லிட்டு இருக்கான்னு பாக்கறீங்களா???
எனக்கு கேன்சரை பற்றி சின்ன வயசுல சினிமாக்களில் தான் பார்த்த நியாபகம்!!
ஏதாச்சும் காதல் ஜோடி இருப்பாங்க,அவிங்க அநியாயத்துக்கு லவ் பண்ணிட்டு
இருப்பாய்ங்க,ஒரு பிரச்சினையும் இருக்கறா மாதிரி தெரியாது,என்னடா ஒரு
மேட்டரும் இல்லையேன்னு பாத்தா கரீட்டா இந்த கேன்சர் வியாதி வந்துரும்.ஒன்னு
ஹீரோக்கு வரும் இல்லை ஹீரோயின்க்கு வரும்,இல்லை ரெண்டு பேருக்கும்
வந்துரும்,அப்புறம் சால்வையை போத்திகிட்டு யேசுதாஸ் குரல்ல ரெண்டு பாட்டு
போட்டுவிட்டு படத்தை முடிச்சிருவாய்ங்க!!
இது மாதிரி சினிமா கதாசிரியர்களுக்கு கற்பனை பஞ்சம் வரும்போது எல்லாம் கை
கொடுப்பது இந்த கேன்சர் தான்!! அது தவிர எனக்கு பெருசா தெரியாது!! பயங்கர
வியாதி,வந்தா சிகிச்சை எல்லாம் கஷ்டம் அப்படின்னு மட்டும் தான் தெரியும்.
அதுக்கு மேல பெரிய அளவுக்கு விழிப்புணர்வு வந்ததுன்னா அது இந்த பதிவை
பார்த்த அப்புறம் தான். மார்பகப்புற்று நோய் வந்து அந்த அம்மா என்ன என்ன
சிகிச்சை எடுத்துக்கிட்டாங்க,என்ன என்ன பக்க விளைவுகள்/கஷ்டங்கள் எல்லாம்
பட்டாங்க அப்படின்னு கூட இருந்து பாத்தா மாதிரி ஒரு உணர்வு!! அப்போ கூட நாம்
ஏதோ உடைக்க முடியாத கோட்டைல இருக்கறா மாதிரியும,் நமக்கோ நம்மல சுத்தி
இருக்கறவங்களுக்கோ கேன்சர் எல்லாம் வராது அப்படின்னு ஒரு குருட்டு நம்பிக்கை
இருந்துச்சு.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னுடைய நண்பர் ஒருவர் தனது தாய்க்கு புற்றுநோய்
இருப்பதாக சொன்ன போது தான் எனக்கு உறைத்தது.அவரின் கஷ்டம் கேட்டு என் மனது
வருத்தப்படும் போது தான் நாம் ஒன்னும் எட்டாத கோட்டையில் இல்லை,இவரை போலவே
எவரும் இது போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படலாம் என்று என் மனதில் தோன்றியது.இதை
பற்றி என் அம்மாவிடம் பேசிய போது தான்,அவர் வேலை செய்யும் இடத்திலும் அவரின்
மேலாளருக்கும் இந்த நோய் வந்ததாக கூறினார்.பிறகு என்னுடைய அலுவலகத்தில்
பணிபுரியும் ஒரு நண்பரின் ஒன்றரை வயது குழந்தை இந்த நோய்க்கு இறையானதை
கேள்வி பட்டேன். இது தவிர சுற்றமும் நட்பும் என்று பல இடங்களில் அங்கே இங்கே
இந்த நோயின் பாதிப்பை பார்த்துவிட்டு ,நாம் நினைப்பதை விட அதிகமாகவே நம்மை
சூழ்ந்துள்ளது என்று புரிந்துக்கொண்டேன். அதற்கு பின் இதை பற்றி அதிக அக்கறை
எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த போது ,இந்த நோய் பற்றி நமக்கு
பெரிதாக ஒன்றுமே தெரியாது என்று இடித்தது.
ஒரு கொடிய எதிரி நம்மை வீட்டை சுற்றி குழுமியிருக்கும் போது அவனை பற்றி
தெரிந்துக்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று
அப்பொழுது பட்டது.உடனே இந்த நோய் பற்றிய அடிப்படை அறிவையும்
விழிப்புணர்வையும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி
விட்டேன்.அப்பொழுதுதான் நான் பார்த்து படித்து ஒரு தொடரின் மூலம்
உங்களிடமும் அதை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.சர்வேசனின்
இந்த பதிவை பார்த்த பின் என் உந்துதல் உறுதியானது!
கேன்சரின் காரணங்கள் என்னவென்று தெளிவாக இது வரை மருத்துவர்களால் கூற
முடியாவிட்டாலும்,என்னை பொருத்தவரை கேன்சரின் பாதிப்புக்குகளுக்கு முக்கிய
காரணம் விழிப்புணர்வுயின்மை என்றே சொல்லுவேன் . தொடக்கத்திலேயே
கண்டுபிடித்தால் இதன் பாதிப்புகளை பெருமளவு
குறைக்கலாம்,சிகிச்சையிலும்நிறைய பலன்களை பெறலாம். அதுவுமில்லாமல் நம்
உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் கவனமாக இருப்பதன் மூலம் இந்த நோய்
வருவதை தவிர்க்கலாம்.நமது கவனமின்மையால் முற்றிப்போன பிறகு
கண்டுபிடித்துவிட்டு மல்லுக்கட்டும் நிலையை தவிர்த்தாலே,இந்த நோயின்
கொடூரத்தை எதிர்க்கொள்ள பெருமளவு வசதியாக இருக்கும்!
அதற்கான விழுப்புணர்வையும்,அறிமுக அறிவையும் இந்த தொடர் உங்களுக்கு
அளித்தால்,நான் இதை எழுதியதற்கான பலனை பெற்றதாக உணர்வேன்.
சரி சரி!! மொக்கை போட்டது போதும்,தொபுகடீர்னு மேட்டருல குதிக்கலலாமா???
இந்த கேன்சர்னா என்னபா மொதல்ல??? இரத்த புற்றுநோய்,மார்பக
புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் இப்படி உடம்புல ஒரு இன்ச் விடாம எங்கிட்டு
பாத்தாலும் வருது??அப்படி என்னதான் நடக்குது ஒடம்புல??? ஏன் அதை
குணப்படுத்த இவ்வளவு கஷ்டமா இருக்கு??
நம்ம உடம்பு அப்படின்னு எடுத்துக்கிட்டா என்னன்ன இருக்கு??
கை,காலு,கண்ணு,மூக்கு....உடம்புக்குள்ளாரன்னு பாத்தா
இதயம்,மூளை,நுரையீரல்,சிறுநீரகம் அப்படின்னு எத்தனையோ உறுப்புகளை
பார்க்கிறோம்.ஆனா அடிப்படையா நம்ம உடம்புல எல்லாமே உயிரணுக்களால(cells) ஆனது.
எலும்பு சதை ரத்தம் எல்லாமே கடைசியா பாத்தீங்கன்ன உயிரணுக்களால ஆனதுதான்.
ஆனா ஒவ்வொறு உறுப்புக்கும் உயிரணுக்கள் வித்தியாசமா இருக்கும்.அதாவது
நுரையீரல்ல இருக்கற உயிரணுக்கள் மூளையில இருக்கற உயிரணுக்களை விட சற்றே
மாறுபட்டு இருக்கும்.இந்த உயிரணுக்கள் பல கோடி எண்ணிக்கைல நம்ம உடம்பு
முழுக்க இருக்கு.இவைகள் தினமும் நம் உடலில் உருவாகிக்கொண்டும்
அழிந்துக்கொண்டும் இருக்கின்றன்.ஒவ்வொரு உயிரணுவும் இப்படி தான் இருக்கனும்
அப்படின்னு ஒரு நியதி இருக்கு.அது நமது மரபணுவை(Genes) பொருத்து
அமையும்.அதுக்கு ஏத்தா மாதிரி தான் ஒவ்வொரு உயிரணுவும் உருவாகிட்டு
இருக்கும்.
இது மாதிரி ஒழுங்கா உருவாகிட்டு அழிஞ்சிகிட்டு இருந்தா பிரச்சினையே இல்ல.
ஆனா சில சமயம் இந்த மாதிரி நியதியை விட்டு சில உயிரணுக்கள் வித்தியாசமாக
உருவாக ஆரம்பிக்கும்.அது மட்டும் இல்லாமல் தன்னை போலவே வித்தியாசமான
உயிரணுக்களை அசுர வேகத்தில் உருவாக்கித்தள்ளிக்கொண்டே போகும்.
அட!!அது பாட்டுக்கு உருவாக்கிட்டு போகட்டும்,அதனால என்ன?? இதனால லேசா
அங்கிட்டு இங்கிட்டு வீங்கி வேணா போகலாம்,இதனால உயிருக்கு ஆபத்து வர
அளவுக்கு அப்படி என்ன பிரச்சினை அப்படின்னு கேக்கறீங்களா???
அடுத்த பகுதியில சொல்றேன் பொறுங்க! :-)
நில் கவனி கேன்சர் - பாகம் 2
நம் உடலில் உள்ள உயிரணுக்களில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக உருவாகுபவை
தான் இந்த கேன்சர் உயிரணுக்கள் என்று போன பகுதியில் பார்த்தோம்.கூடவே இந்த
வகை உயிரணுக்கள் மேலும் தன்னை போன்ற மற்ற உயிரணுக்களை உற்பத்தி செய்து
தள்ளிக்கொண்டு இருக்கும் என்று போன பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.இருந்தா
இருந்துட்டு போகட்டும்,அதனால என்ன,இதனால என்ன பிரச்சினை அப்படின்னு நீங்க
கேக்கறீங்க!!
என்ன மாதிரி நீங்களும் பாசக்கார பயலுவ தானே,அதுவும் வந்தாரை வாழ வைக்கும்
இனத்துல வேற பொறந்துட்டோம், அதான் என்னை மாதிரி உங்களுக்கும் இந்த கேள்வி
தோனுது.ஆனா பாருங்க இந்த வித்தியாசமான உயிரணுக்கள் சும்மா இருக்கறது இல்லை
,சாதுவாக தான் உண்டு தன் கடமை உண்டுன்னு சுத்திட்டு இருக்கற மத்த
உயிரணுக்களை இது தாக்கி அழிக்க ஆரம்பிக்குது,அதுமில்லாமல் உடலில் தன்னுடைய
இடத்தை விட்டு வேறு ஒரு உறுப்புக்கு ஏல்லாம் போக ஆரம்பிக்குது.ஒவ்வொரு
உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான உயிரணுக்கள் உண்டு அப்படின்னு போன பகுதியில
சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கா?? இது பாட்டுக்கு இஷ்டத்துக்கு
சுத்திக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகறது?? அதாவது ஒரு டாக்டரு
மருத்துவமனைக்கு போய் வேலை செய்யனும்,என்னை மாதிரி மென்பொருள் வல்லுனர்கள்
ஆபீசுக்கு போய் வேலை(?!) செய்யனும். எங்களை ஏதாச்சும் ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி ஆணி பிடுங்க சொன்னா காமெடி தான்!!
ஒரு 100 பேரு சுறுசுறுப்பா சீரா வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையை கற்பனை
செய்துக்கொள்ளுங்கள்,அதில் ஒரு பத்து தொழிலாளிகள் வேலையும் செய்யாமல்,மற்ற
தொழிலாளிகளையும் தன்னை போல மாற்றிக்கொண்டு தங்கள் வேலை செய்யும் வட்டத்தை
விட்டு மத்த வட்டங்களுக்கும் சென்று பிரச்சினை செய்கிறார்கள் என்று
வைத்துக்கொள்ளுங்கள்,அப்பொழுது தொழிற்சாலை என்னத்துக்கு ஆகறது?? சீக்கிரமே
திவாலாகி போக வேண்டியதுதான். இப்படிப்பட்ட நிலைமை தான் கேன்சரால்
பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலுக்கும் ஏற்படுகிறது.
ஒழுங்கா சொன்ன பேச்சை கேட்டுக்கிட்டு இருக்கற உயிரணுக்களில் எப்படி திடீர்னு
இந்த கேன்சர் உயிரணுக்ளாக உருவாக ஆரம்பிக்கின்றன????
ஒழுங்காக இருக்கும் உயிரணுக்களில் இந்த மாதிரியான மாறுந்தன்மை(mutation)
வருவதற்கு ஒரு வித நச்சுப்பொருளே காரணம்.இந்த நச்சுப்பொருள் உருவாக்கும்
காரணிகளை carcinogens என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.புகையிலை,கதிர்வீச்சு
மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்கள்,சில கொடிய தொற்றுநோய்
கிறுமிகள் போன்றவற்றை இந்த carcinogens பட்டியலில் சேர்க்கலாம். இந்த
நச்சுப்பொருள்களை ஒரே அளவு உட்கொண்ட இரு வேறு நபர்களில் ஒருவருக்கு கேன்சர்
வரலாம்,ஒருவருக்கு வராமல் போகலாம்.அது அவரவரின் மரபணு,உடல்
நிலை,வயது,உடம்பில் உள்ள DNA-க்களுடன் இந்த carcinogen-களின் செயல்பாடு
இப்படி பல விஷயங்களை பொருத்தது. புகையிலை ஒரு முக்கியமான carcinogen
என்பதால் தான் புகை பிடிப்பது,புகையிலை போடுவது ஆகியவற்றை நிறுத்த வேண்டும்
என்று மருத்துவர்கள் அறிவுருத்துவதற்கு முக்கியமான காரணம்.(சாம் தாத்தா,இது
உங்களுக்கு தான்!! :-))
இப்படியாக உருமாறும் உயிரணுக்களால் மற்ற உயிரனுக்களிடம் பரவி கேன்சர்
ஒருவரின் உடலை அரிக்கத்தொடங்கி விடுகிறது.உடலில் உள்ள எந்த பகுதியில் உள்ள
உறுப்பிலும் இந்த கேன்சர் வரலாம் என்றாலும் முக்கியமாக மக்களை பாதிக்கும்
சில கேன்சர் வகைகளை கீழே பார்க்கலாம்.
1.)Prostate Cancer (prostate என்பதற்கு தமிழ்ல என்ன வார்த்தைனு தெரியல
மக்கா,இது ஆண்களிடையே முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)
2.)நுரையீரல் புற்றுநோய்
3.)Colorectal cancer(Colon-க்கு தமிழ்ல என்னபா??அங்கிட்டு வர புற்றுநோயாம்
இது)
4.)சிறுநீரகப்பை புற்றுநோய்(Bladder cancer)
5.)மார்பகப்புற்றுநோய் (இது பெண்களிடம் முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)
6.)இரத்தப்புற்றுநோய்(Leukemia or blood cancer,இது இளைஞர்களிடையே அதிகமாக
காணப்படும் புற்றுநோய்)
7.)சிறுநீரக புற்றுநோய் (nephroblastoma /wilms tumour) மற்றும் நரம்பு
மண்டல புற்றுநோய்(neuroblastoma-CNS central Nervous system tumour) - இது
குழந்தைகள் இடையே அதிகமாக தோன்றும் புற்றுநோய்
8.)Cervical cancer (இது பெண்களிடையே அதிகமாக தோன்றும் மற்றுமொரு புற்றுநோய்)
மேற்குறிப்பிட்ட வகைகள் எல்லாம் பரவலாக காணப்படும் புற்றுநோய்கள்,ஆனால்
உடம்பில் பல பாகங்களிலும் இந்த புற்றுநோய்கள் வர வாய்ப்புண்டு. வயதாக
ஆகத்தான் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் இந்த நோய் எல்லா
வயதினருக்கும் வரலாம்.கருவில் உள்ள சிசுவுக்கு கூட இந்த நோய் வரலாம் என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன்.
உலக அளவில் உயிரிழப்புகளில் 13 சதவிகிதம் கேன்சரினால் ஏற்படுகிறது.2007-இல்
மட்டும் உலகளவில் 76 லட்சம் பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்கா
போன்ற வளர்ந்த நாடுகளில் 25% சாவுகள் கேன்சரால் ஏற்படுகிறது. அதாவது நாலு
பேரில் ஒருவர் கேன்சரால் உயிரிழக்கிறார்....
சரி சரி!!
போதும் நிறுத்து!! நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது!! இப்போ இந்த நோய்க்கு
எப்படி சிகிச்சை தருவாங்க?? இந்த நோயை முழுமையா குணப்படுத்த முடியுமா??
அப்படின்னு கேக்கறீங்களா??
அடுத்த பகுதியில சொல்லுறேன் !! கொஞ்சம் பொறுங்க!!
வரட்டா??? :-)
நில் கவனி கேன்சர் - பாகம் 3
இந்த நோயை பற்றி ஏகத்துக்கு பயம் காட்டினது போதும்,இப்போ இதை எப்படி சரி
பண்ணலாம்னு சொல்லு அப்படின்னு போன பகுதியோட கடைசியில நீங்க எல்லாம் கேட்டு
இருந்தீங்க!!!
இது நோயை குணப்படுத்துவதுக்கு கொஞ்சம் மெனக்கெடனும் மக்களே!!
நோயின் தீவிரம்,இதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிக்கப்பட்டது,நோயாளியின்
வயது,சிகிச்சையை தாங்கிக்கொள்ளும் திறன் போன்ற பல விஷயங்களை பொருத்து இந்த
நோய்க்கான சிகிச்சையும்,குணப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் மாறு படும்!!
நீங்க யோசிச்சிட்டிருக்கறது போல எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கறோமோ
அவ்வளவுக்கவ்வளவு நல்லது!! கண்டுபிடிச்ச அப்புறம் நோயை குணப்படுத்த பல
வழிமுறைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகப்படுத்துவாங்க ,ஆனா பரவலான சில
வழிமுறைகளை இப்போ பாக்கலாம்.
கீமோதெரபி:
புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கவல்ல மருந்துகளை மாத்திரை வடிவில் கொடுத்து
குணப்படுத்துவது தான் கீமோதெரபி எனப்படும்.குறிப்பாக உயிரணுக்களின்
பல்கிப்பெரிகும் தன்மையை குலைப்பதே இந்த மருந்துகளின் முக்கிய பணி.மற்ற
சிகிச்சை முறைகளை போல இந்த முறையிலும் புற்றுநோய் உயிரணுக்களுடன் சேர்த்து
நல்ல உயிரணுக்களும் பாதிக்கப்படும்,ஆனால் சிகிச்சை முடிந்த பின் புற்றுநோய்
அல்லாத உயிரணுக்கள்் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பி விடும்.
இரத்தப்புற்றுநோயை பொருத்த வரை கீமோதெரபியின் வீரியம் அதிகமாகும்பொழுது
புற்றுநோய் உயிரணுக்களோடு சேர்த்து ஆரோக்கியமான உயிரணுக்களும் பெருமளவில்
அழிந்துபோய் உடம்பில் எதிர்ப்பு சக்தியே முழுவதுமாக முடங்கிப்போகலாம்.அந்த
மாதிரியான சமயத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை (Bone marrow
transplant) எனப்படும் ஒரு சிகிச்சை அளிக்கப்படும். ஒருவரின் உடலில்
ரத்தத்தின் உற்பத்தி எலும்பு மஜ்ஜையில் இருந்துதான் உருவாகிறது என்பதால் அதை
புதிதாக பொருத்துவதன் மூலம் அழிந்துப்போன இரத்த உயிரணுக்களுக்கு பதிலாக
புதிதான உயிரணுக்கள் உருவாக்கப்படுகின்றன.
அறுவைசிகிச்சை:
உடலில் ஒரு பகுதியில் கேன்சர் உருவாகியிருக்கும் போது அந்த பகுதியை மட்டும்
அறுவைசிகிச்சை மூலமாக அகற்றுவது .இது புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது
என்பதை பொருத்தே சாத்தியப்படும். நான் முன்பே கூறியிருந்தது போல புற்றுநோய்
உயிரணுக்கள் கண்ட மேனிக்கு இங்கிட்டும் அங்கிட்டும் சுத்த ஆரம்பிக்கும்
என்பதால் அவை அப்படி பரவும் முன்னரே அறுவைசிகிச்சை செய்தால் உண்டு. கட்டியை
வெட்டி எடுத்த பிறகும் சில உயிரணுக்கள் ஒளிந்து கொண்டிருந்து பின்னொரு
காலத்தில் தலை தூக்கலாம்.ஆனால் இந்த பிரச்சினை மற்ற சிகிச்சை முறையிலும்
உண்டு.
கதிர்வீச்சு சிகிச்சை:
உடலில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் கதிரிவீச்சினை செலுத்தி
பாதிக்கப்பட்ட உயிரணுக்களை கொல்வது இந்த வகையான சிகிச்சையில் செய்யப்படும்
முறை.இப்படி கதிர்வீச்சு செலுத்தும்போது பாதிக்கப்பட்ட உயிரணுக்களோடு நல்ல
உயிரணுக்களும் சேர்ந்தே தான் அழிந்து போகும் ஆனால் பாதிக்கப்படாத
உயிரணுக்கள் திரும்பவும் தானே உருவாகிக்கொள்ளும். இந்த வகை சிகிச்சையில்
கடுமையான பக்கவிளைவுகளும் உண்டு.
கேன்சரின் விளைவுகளுக்கான சிகிச்சை:
எல்லாவிதமான சிகிச்சையும் பலனளிக்காத போது,நோயை குணப்படுத்துவதற்கான நிலையை
தாண்டிய பின், நோயினால் நோயாளிக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க சிகிச்சை
அளிக்கப்படும்.இந்த சிகிச்சைக்கு Symptom control அல்லது Palliative
treatment என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.பாதிக்கப்பட்டவருக்கு உண்டாகும்
உடல்சோர்வு,வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த சிகிச்சையில் முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட முறைகள் தவிர வேறூ சிகிச்சை முறைகளும் கையாளப்படலாம்,ஆனால்
முக்கியமான முறைகளை மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
சரிபா!!நீ சொல்லுறது புரியுது! இந்த நோய் வந்துருச்சான்னு எப்படி
தெரிஞ்சுக்கறதுன்னு கேக்கறீங்களா??
திரும்பவும்,கேன்சரில் பல வகைகள் இருப்பதால் எல்லாவற்றிற்கும் ஒரே அறிகுறி
கிடையாது,குத்துமதிப்பா சில அறிகுறிகளை கீழே காணலாம்.
அரிப்பு,சிறு கட்டிகள்இருமல்,எலும்பு முறிவு,ரத்தக்கசிவு
போன்றவை.பாதிக்கப்பட்ட இடத்தில் வலி,ஆனால் புற்றுந்நோயின் ஆரம்ப காலத்தில்
வலி அவ்வளவாக இருக்காது,நோய் சற்றே முற்றிய பின் தான் இந்த வலி தோன்ற
ஆரம்பிக்கும்.உடல் எடை இழப்பு,உடல் சோர்வு,பசியின்மை ஆகியவையும் இந்த
நோய்க்கான அறிகுறிகள்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் கேன்சருக்கு மற்றுமின்றி பிற்பல உடல்
உபாதைகளுக்கும் வரலாம் என்பதை மறக்க வேண்டாம்.
இப்படி அறிகுறிகள் காட்டிக்கொடுத்தாலும் நோய் இருப்பதை அறிய
ரத்தப்பரிசோதனை,Xray,CT scan மற்றும் Endoscopy ஆகிய முறைகளை
பயன்படுத்துவார்கள்.இதன் மூலம் ஆறிந்துக்கொண்ட பின் பாதிக்கப்பட்ட உறுப்பிள்
இருந்து மாதிரி திச்சுக்களை உடலில் இருந்து வெட்டியெடுத்து ஆய்வு செய்து
உறுதிப்படுத்துகிறார்கள்
தாய்மார்கள் மார்பகப்புற்றுநோய்க்கு சுய பரிசோதனை செய்துக்கொள்வதற்கான
வழிமுறையை இந்த சுட்டியில் சென்று பார்க்கலாம் .
இன்னைக்கு இது போதும்,அடுத்த பகுதியில இந்த நோயை தவிர்க்க நாம் என்னென்ன
செய்யலாம் என்று பார்க்கலாம்!!!
வரட்டா? :-)
நில் கவனி கேன்சர் - பாகம் 4 (நிறைவு பாகம்)
போன பகுதியில் இந்த நோய்க்கான சிகிச்சை முறைகளையும்,இந்த நோய் வந்தா அதன்
அறிகுறிகள் என்னென்ன மற்றும் இந்த நோய் உள்ளதென்று எப்படி
உறுதிப்படுத்திக்கலாம் என்பதையும் பாத்தோம்.
இந்த பகுதியில இந்த நோயிடம் இருந்து தப்பிக்க நாம என்னெவெல்லாம் செய்யலாம்
என்று பார்க்கலாம்.
புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்:
கேன்சரை தவிர்க்கவேண்டும் என்றால் கேன்சருக்கு காரணமான carcinogens-களை
முடிந்த அளவுக்கு தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம்.அப்படி நாம்
சிந்திக்கும்போது நமது நினைவில் முதலில் வரும் பொருட்கள் இந்த குடிப்பழக்கம்
மற்றும் புகை பழக்கமும் தான். நுறையீரல் புற்றுநோய் வந்த ஆண்களின் 90% பேர்
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள் என்று
கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. புகைப்பழக்கம் மட்டுமல்லாது
குட்கா,பன்மசாலா போன்ற புகையிலை சம்பந்தமான மற்ற பழக்கங்களையும் அறவே
நிறுத்துவது இந்த நோயை தவிர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன.
உணவப்பழக்கம்:
ஒழுங்கா வேளைக்கு சாப்பிடறது நாம நிறைய பேர் அலட்சியமா எடுத்துக்கற ஒரு
விஷயம்.ஆனா நாம எளிமையா கையாளக்கூடிய இந்த பழக்கத்தினாலேயே பல நோய்கள்
அண்டாம நிம்மதியா ஆரோக்கியத்தோட வாழலாம்.உணவில் கனி காய்கறிகளை
சேர்த்துக்கொள்வது,நொருக்கு தீனியை குறைத்து ஒழுங்கான உணவு வகைகளை
சாப்பிடுவது,நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவை நமது உணவுமுறையில் நாம்
கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்.உணவுமுறை பற்றி ஷாலினி
அவர்கள் போட்டிருக்கற பதிவையும் அதில் அவங்க கொடுத்திருக்கற சுட்டிகளையும்
வேணா ஒரு சுத்து பாத்துட்டு வந்திருங்க! :-)
உடல் பருமன்:
மாறி வரும் நமது வாழ்க்கை சூழலில் நாம் அன்றாடம் இங்கும் அங்கும் நடந்து
போவதே மிகவும் குறைந்து விட்டது.கடைசியாக எப்பொழுது ஓடினோம் என்றே நினவில்
இல்லை.அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும்
மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார்
என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.இதனால்
உடல் பருமன் அதிகமாக நம் உடல் வாகு மோசமாவதோடு புற்றுநோய் போன்ற
வியாதிகளுக்கும் உங்கள் உடல் தோரணம் கட்டி வரவேற்க ஆரம்பித்து விடுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் உடற்பயிற்சி பற்றி அவ்வளவாக நம் நாட்டில்
விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. ஜிம் என்றாலே ஏதோ ஆர்னால்டு
ஷிவாஜிநகர்(:P) போன்ற பயில்வான்கள் மட்டுமே செல்லும் இடம் என்ற எண்ணம்
இன்னும் பலர் நெஞ்சில் உறுதியாக உள்ளது. உடற்பயிற்சி கூடம் செல்ல
முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நடைபழக்கமாவது தொடர்ந்து செய்யும் பழக்கத்தை
உருவாக்கிக்கொண்டால் நீரிழிவில் இருந்து புற்றுநோய் வரைக்கும் பல நோய்களின்
கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.
கூடவே தொப்பையையும் குறைக்கலாம்!!
மருத்துவ பரிசோதனை:
முறையாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வது இந்த நோயை சீக்கிரமே
அறிந்துக்கொள்ள பெருமளவு உதவும். இரண்டாம் பகுதியின் பின்னூட்டத்தை
பார்த்தால் இந்த நோய்க்கு அவ்வளவாக பெரிய அறிகுறிகள் இல்லாததால் இதை
சீக்கிரமே அறிய முடிவதில்லை என்று பலர் கூறியிருப்பதை பார்க்கலாம்.இதனால்
நாமே சென்று அவ்வப்போது பரிசோதனை செய்துக்கொள்வது மிக முக்கியமான
ஒன்றாகிவிடுகிறது.போன பதிவின் பின்னூட்டத்தில்,் நியூசீலாந்தில் இரண்டு
வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் கட்டாயமாக மார்பகப்புற்று நோய்க்கு பரிசோதனை
செய்ய வேண்டும் என்றும் ,ஐம்பது வயது மேற்பட்டோருக்கு இந்த பரிசோதனையின்
செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றும துளசி டீச்சர்
தெரிவித்தார்.பரிசோதனை மையத்திற்கு போகாவிட்டாலும் சென்ற பதிவில்
குறிப்பிட்டது போல் பெண்கள் தாமாகவே பரிசோதனைகளை செய்துக்கொள்வது இந்த நோயை
சீக்கிரம் கண்டுபிடிக்க உதவும்.
தொடர்ந்து வரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்:
ஒருவருக்கு தொடர்ந்து இருமல் ,பேதி,எடை குறைவு,காரணமில்லாமல் உடல் சோர்வு
போன்றவை இருந்தால் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நன்று.எனக்கு தெரிந்த ஒரு
நண்டரின் உறவினர் ஒருவர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
அவர் முதலில் தன் உடலில் கொஞ்சம் வீக்கம் இருப்பதை தெரிவித்தபோது ஏதாவது
கட்டியாக இருக்கும் என்று தட்டிக்கழித்து விட்டார்களாம்.என்னடா ஒரே
பூச்சாண்டி காட்டுகிறானே என்று நினைக்க வேண்டாம்.நம்மிடையே விழிப்புணர்வு
இல்லாததால் தவிர்க்கக்கூடிய பல வலிகளை நாம் தேவையில்லாமல்
வரவைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவுபடுத்தவே இதை கூறுகிறேன்.
இதற்காக நாளையே ஏதாவது தும்மல் இருமல் வந்தால் புற்றுநோயாக இருக்குமோ என்று
பயந்து விடவேண்டும் என்று அர்த்தமில்லை.ஆனால் நாளைக்கே இந்த நோய் வந்தாலும்
கூட தைரியமாக போராடவும்,அதை தவிர்க்ககூடிய வழிமுறைகளை தெளிவாக
தெரிந்துக்கொண்டு சந்தோஷமாக வாழவும்தான் இந்த பதிவு.
இந்தப்பதிவை நிறைவு செயவதற்குமுன் இன்றைக்கு நான் பெற்ற ஒரு செய்தி.காயத்ரி
என்ற இரண்டு குழந்தைகளின் தாய் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவரின்
சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவரை பற்றி மேலும் தகவல்
அறிய இந்த சுட்டிக்கு சென்று பார்க்கவும் .
இந்த பெண்மணிக்கு அமெரிக்காவில் இருக்கும் எவரேனும் உதவி செய்ய
விரும்பினால்ஆர்க்குட் அமெரிக்க தமிழர்கள் குழுமம் மூலமாகவும் உதவலாம்!!
இந்த பதிவுத்தொடர் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று
நம்புகிறேன்.மேலும் வருங்காலத்தில் கேன்சரை பற்றி யாரேனும் அறியவிரும்பினால்
அவர்களுக்கு முழுமையான அறிமுகப்பதிவாகவும் மற்றும் பொதுவான விழிப்புணர்வு
பதிவாகவும் இந்த தொடர் அமைந்தால் மகிழ்ச்சி!!
ஒவ்வொரு பதிவுக்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது
கோடானுகோடி நன்றிகள்!!
வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்! :-)
நன்றி - For More
Click Here
கேன்சர் பற்றிய மேலும் தகவல்களுக்கு: http://anuratha.blogspot.com/ |